அதிரையில் நீரின்றி வறண்ட குளங்கள்.. கடலில் கலக்கும் தொக்காலிக்காடு அணை நீரை சி.எம்.பி வாய்க்காலில் விடலாமே?

Editorial
0
தொக்காலிக்காடு அணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து கடலுக்கு சென்று வரும் நிலையில், அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு சி.எம்.பி. வாய்க்கால் வழியாக அந்த தண்ணீர் திருப்பி விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிரையில் கடந்த சில ஆண்டுகளாக குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. குளங்களுக்கு நீர் செல்லும் சி.எம்.பி வாய்க்காலும் தூர்வாரப்படாமல் புதர்களாலும், கழிவு நீராலும் பயனற்று காணப்படுகிறது. ஆனால், அதிரை அருகே தொக்காலிக்காடு அணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறது.

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கடைமடை பாசன விவசாயிகளின் நலன் கருதி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது தொக்காலிக்காடு அணை. இதனை சரிவர பராமரித்து இருந்தால் மகிழங்கோட்டை, ராஜாமடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பாசன வசதி பெற்று இருக்கும். இந்த அணையை உயர்த்தி பலப்படுத்தினால் இன்னும் பல கிராமங்கள் மட்டுமின்றி அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கொடுத்திருக்க முடியும். 

இந்த அணையின் நீரை சி.எம்.பி. வாய்க்காலில் இணைத்து பக்கத்தில் உள்ள கடைமடை பாசன கிராமங்கள் ஒரு போக சாகுபடி செய்து பயன்பெற்றிருக்கலாம். அதிரையின் குளங்களிலும் தண்ணீரை நிரப்பி இருக்கலாம்.  புதுக்கோட்டை உள்ளூர் அருகே செல்லிக்குறிச்சி ஏரி 400 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த ஏரியில் அணையின் நீரை பெருக்கினால் 1500 ஏக்கர் இருபோக சாகுபடி செய்யலாம். பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மகாராஜசமுத்திரம் அணை நிரம்பி தண்ணீர் அதிராம்பட்டினத்துக்கும் மல்லிப்பட்டினத்துக்கும் இடையில் கடலில் கலந்து வருகிறது. 

இந்த அணையின் இருபக்கமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. இந்த அணையின் தண்ணீரை தேக்கி ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி பாசனத்துக்கு பயன்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி இயக்குனர் மு.கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேசுகையில், "பட்டுக்கோட்டை தாலுகாவில் மகாராஜசமுத்திரம் ஆறு, நசுவினி ஆறு, கண்ணன் ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, அக்கினி ஆறு மற்றும் இப்பகுதி காட்டாறுகளின் குறுக்கே கடைமடை பகுதிகளில் அணைகளை கட்டி சி.எம்.பி. வாய்க்கால்களில் இணைத்துவிட்டால் கடைமடை பாசன பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...