அதிரை ARDA நிலம் ஆபிஸ் கட்ட இல்லையாம்.. குளமாக மாற்றவாம்! ஐகோர்டில் வழக்கு

Editorial
0
அதிரையில் நகராட்சி அலுவலகம் கட்ட இடமில்லை என்று சொல்லி மெயின் ரோட்டில் உள்ள ARDAவுக்கு சொந்தமான நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி வந்த நகராட்சி நிர்வாகம், தற்போது அதை குளமாக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு அதிரை ஊரக மேம்பாட்டு சங்கம் (ARDA) சார்பில் அதிரை ஷிபா மருத்துவமனைக்கு என மெயின் ரோடு அருகே அரசு இரண்டாம் எண் பள்ளிக்கு பின்புறம் 1.34 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அரசு அர்டாவுக்கு நிலம் விற்பனை செய்ததை எதிர்த்து வீரகனேசன் என்பவர் உரிமையியல் வழக்கு தொடுத்தார். 

பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையை தற்போது திமுக நகர செயலாளராக உள்ள இராம.குணசேகரன், முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். தொடர் வழக்குகளால் இந்த நிலத்தில் மருத்துவமனை கட்டும் பணியினை துவங்குவதில் காலத்தாமதம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு அரசு சர்வேக்கு விண்ணப்பித்து சங்கத்திற்கு சொந்தமான மேற்படி நிலத்தினை அளந்து கருங்கல் வேலி அமைத்தனர்.

கடந்த மே மாதம் அன்று முதல் சுற்றுச்சுவர் கட்டும் வேலை தொடங்கி நடைபெற்றது. அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம் உள்ளிட்டோர் சுற்றுச்சுவர் கட்டும் வேலையை தடுத்ததாக ARDA புகாரளித்தது.

இந்த நிலத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு அர்டா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி நாகார்ஜுன் அமர்வில் இந்த வழக்கு ஜூலை மாதம்
விசாரணைக்கு வந்தபோது நகராட்சி ஆணையர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீதிமன்றம் உத்தரவிட்டும் அர்டா நிலத்தில் நகராட்சி தலையிடுவதற்கு என்ன உரிமை உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த ARDA நிலம் தொடர்பாக திமுக நகர செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான இராம குணசேகரன் கடந்த சில மாதத்திற்கு முன் அளித்த பேட்டியில் நகராட்சி அலுவலகம் கட்ட அர்டாவின் ஒரு பகுதி இடத்தை வழங்க வேண்டும். முழு நிலத்தையும் கேட்கவில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் ARDA நிலம் ஏற்கனவே நீர் நிலையாக இருந்ததாகவும், அதை நீர் நிலையாக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நகராட்சி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. மேற்கண்ட வழக்கு விபரங்கள், தரவுகளின் அடிப்படையில் ARDA நிலம் என்பது நீர்நிலை அல்ல என்பது தெளிவாகிறது. மறுபக்கம் அதிரையின் பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அண்மையில் ஆணையான் குளத்தை மூடி சாலை அமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகமே ஈடுபட்டது.

இப்படி ஏற்கனவே இருக்கும் நீர் நிலையை மூடி சாலையாக்கும் நகராட்சி, நீர் நிலை அல்லாத மருத்துவமனை கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தை நீர்நிலையாக்க வேண்டும் எனக்கோரி வழக்கு தொடர்ந்து மக்கள் பணத்தை வீணடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் அதிரை நகராட்சிக்கு அதிரை நல மேம்பாட்டுக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், "அதிராம்பட்டினம் நகராட்சி மன்றமே  நிர்வாகமே! மக்களின் வரி பணத்தில் அர்டாவுக்கு எதிராக  முறையான ஆவணங்கள் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு நடத்த செலவு செய்யாதே. அரசு பணத்தை வீண் விரயமாக்காதே. ஊர் பொது மக்கள் சார்பாக கண்டனத்தை பதிவு செய்கின்றோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...