அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழல், கடற்காற்று, அருகில் உள்ள தென்னந்தோப்புகளின் நிழல், 2 கி.மீ தொலைவுக்கு வெண்ணிற மணற்பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் என அனைவரையும் இந்த கடற்கரை வசீகரித்து வருகிறது.
இதனால், விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் ‘தஞ்சாவூர் மாவட்ட பீச்' எனப்படும் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வருகின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர். மேலும், குளிர்பானக் கடைகள், பொம்மைக் கடைகள் என ஏராளமான திடீர் கடைகள் முளைத்து வருகின்றன.
இந்த நிலையில் புதுப்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன் என முகநூலில் முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது இக்பாக் என்பவர் கேட்டிருந்தார். அவரது தனது பதிவில், "அதிரையை அடுத்த புதுபட்டினம் கடல்கரையில் சில வாலிபர்கள் இது போன்ற ஒரு டோக்கனை கையில் கொடுத்து வாகனங்களுக்கு ஏற்றவாறு பணம் வசூல் செய்து வருகின்றனர்.
இது எதற்கு என்று கேட்டபோது கடல் மற்றும் கரை பராமரிப்பு என்று அவர்கள் கூறினர் அங்கு அத்தியாவசிய தேவையான எந்த பராமரிப்பும் நடந்தது போல் தெரியவில்லை இதுவரை பணம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது
முக்கியமாக அங்கு தெரு விளக்குகள் இல்லை சரியான சாலை வசதி இல்லை பொது கழிப்பறைகள் கூட இல்லை ஆனால் எதற்கு இந்த பணம் வசூல் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை
அதுவும் சில நாட்களில் அவர்கள் அங்கு இருப்பது இல்லை அந்த நேரத்தில் பணம் செலுத்தாமல் யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்
இதில் உள்ளூர் வாசிகளுக்கு இலவசம் எனவும் அங்கு இருப்பவர்கள் சிலர் கூறினர்
அதுமட்டுமின்றி இங்கு வெளியூர் ஆட்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் அங்கு கடை நடத்துபவர்கள் சுய வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அந்த ஊர் வாழ்வாதாரம் மேம்படுமென்று அவர்களுக்கு தெரியவில்லையா ?
சமீபத்தில் ஆளும் கட்சி எம் எல் ஏ ஒருவர் இந்த கடல்கரையை சுற்றுலாத் தளங்கமாக மாற்றுவதாக வாக்குறுதி கொடுத்து நேரில் சென்று பார்வையிட்டும் சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது வரை அங்கு எவ்வளவு வசூல் நடந்து இருக்கிறது அந்த பணம் எதற்கு செலவிடப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை இல்லை
அரசு கவனத்தில் கொண்டு இதை தடுக்க வேண்டும் என இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்
குறிப்பு : கடலுக்கு டோக்கன் போட்டது இதுவே முதல்முறையாக இருக்கும் என நினைக்கிறேன். 15-1-2022 பதிவு நாள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு கமெண்டில் பதிலளித்துள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான், "ஆம் அந்த ஊர் ஜமாத் அனுமதியோடு வசூலில் ஈடுபடுகிறார்கள்...
முடிந்தவரை சுத்தம் செய்கிறார்கள்...
குப்பைகளை போட கிணற்று உரைகளை ஆங்காங்கே வைத்துள்ளார்கள்...
இது போல் மனோராவிற்கு செல்ல ஊராட்சி மூலம் ஏலம் விட்டு வசூல் செய்யப்படுகிறது...
மானோராவிற்கு செல்ல கடற்கரைக்கு செல்ல உள்ளூர் வாசிகளுக்கு இலவசம்...
இங்கே ஊர் ஜமாத்திற்கு அப்பணம் சென்று கடற்கரை மேம்பாட்டுக்கு பயன்படுகிறது...
அரசு அதை சுற்றுலா தலமாக்கிவிட்டால் இதுபோல் பணம் வசூல் செய்ய ஏலம் விடுவார்கள்...
அப்பணம் ஊராட்சிக்கு தான் செல்லும்." என விளக்கியுள்ளார்.