அதிரையில் PUBG-க்கு அடிமையாகும் இளைஞர்கள் - சிலை வணக்கத்தின் புதிய அப்டேட்

Editorial
0
அதிரையில் இளம் தலைமுறையினரைப் அடிமையாக்கி இருக்கிறது ‘பப்ஜி’ (PUBG) என்ற மொபைல் வீடியோ கேம். ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு ஆன்லைனில் விளையாடும் விளையாட்டு இது. முழுக்க முழுக்கத் துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு.

இந்த விளையாட்டில் தற்போது "ADVENTURE JUNGLE" என்ற புதிய அப்டேட் ஒன்றை வழங்கி இருக்கிறார்கள். ஆயுதங்களை குவிப்பது இதன் முக்கிய அம்சமாக உள்ள நிலையில், இந்த புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ள சிலைகளை வணங்கி முக்கியத்துவம் கொடுத்தால் கூடுதல் ஆயுதங்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்று. விபரம் அறியாமல் இந்த விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், மார்க்க அறிவு குறைவானவர்கள் வழிகெட்டுப்போகும் நிலை இதனால் ஏற்படும்.

இதுகுறித்து மன நல மருத்துவர் காட்சன் கூறுகையில், "இதில் விளையாடுபவர்களெல்லாம் நிஜவுலகில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி, வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களைக்கூடத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே கழிக்கும் நம் சிறுவர்கள் இந்த விளையாட்டுக்கு அடிமையாவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், இதன் தீவிர பாதிப்புகளைக் கண்கூடாகத் தினமும் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டதற்கு ஒரு காரணம், மாணவர்கள் தங்கள் படிப்பை முற்றிலும் விட்டுவிட்டு, மாலை முதல் அதிகாலை வரை இதில் மூழ்கிக்கிடப்பதுதான். சிலர் பேட்டரி முழுவதும் தீர்ந்துபோகும் வரை மட்டுமல்லாமல் பவர்பேங்க் அல்லது சார்ஜரில் போட்டுக்கொண்டே விளையாடும் அளவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

பொது இடங்களில், பேருந்து, ரயில்களில், நள்ளிரவில் அவ்வப்போது ‘கொல்லு, சுட்டுத்தள்ளு’ என்று கெட்ட வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு கத்த ஆரம்பிக்கின்றனர். நூறு பேர் விளையாடுவதாக வைத்துக்கொண்டால், மற்ற எதிரிகளை (ஆன்லைன் நண்பர்கள்தான்) கொன்றுவிட்டு கடைசி வரை உயிரோடு தங்களைப் பாதுகாத்துக்கொள்பவர்கள்தான் வெற்றிபெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். இதில் தோல்வி அடைந்துவிட்டால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்று, செல்போனை அல்லது வீட்டிலுள்ள பொருட்களை உடைப்பது, ஆக்ரோஷமாக நடந்துகொள்வது, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வது முதல் தற்கொலை முயற்சி வரை செல்கின்றனர். கிடைக்கும் இடைவேளை நேரங்களில் எல்லாம் அனிச்சையாகவே செல்போனை நோக்கிக் கை தானாக நகரும் அளவுக்குப் பலர் சென்றுவிட்டனர்.

இந்தியாவில் ஏராளமானோர் மனப்பிறழ்வு நோய் அறிகுறிகளுடனும், தற்கொலை எண்ணங்கள், ஆக்ரோஷமான நடவடிக்கைகள் போன்ற அறிகுறிகளுடனும் திரிகின்றனர். பல மணி நேரம் விளையாடுவதால் தூக்கம் பாதித்து, யாரோ காதில் பேசுவதுபோல் மாயக் குரல்கள் கேட்கும் ஆபத்தும் இதில் உண்டு.

எனது ஆய்வில் பப்ஜியைப் பயன்படுத்தும் பலர் இரவில் தூக்கமின்மை (61%), பகலில் தூக்கக் கிறக்கம் (34%), தலைவலி, எரிச்சல் (36%), கண் கோளாறுகள் (39%), வகுப்பைப் புறக்கணித்தல் (27%), போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், 7% பேர் தற்கொலை எண்ணங்களுடனும், 14% பேர் பிறரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.நான் சுட்டிக்காட்டிய பப்ஜியின் தாக்கங்களெல்லாம் கடலில் இருக்கும் பனிப்பாறையின் சிறு நுனிதான். அது எவ்வளவு ஆழம் சென்று நங்கூரமிட்டிருக்கிறது என்பது நமக்குச் சீக்கிரமே வெளிப்படக்கூடும். அந்த அபாயகரமான நாளை எதிர்நோக்கி நாம் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். மேலைநாடுகளில் பள்ளிகளில் நடைபெறும் காரணமில்லாத கொலைவெறித் தாக்குதல்கள் நம் நாட்டிலும் நடைபெற்றுவிடாமல் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில்நுட்பரீதியான சமூகச் சீரழிவுகளை நமது அரசு அவ்வளவு தீவிரமாகப் பொருட்படுத்துவதில்லை. இந்தச் சீரழிவுகளெல்லாம் குடும்ப அளவில் கட்டுப்படுத்துவதற்கான எல்லைகளைக் கடந்து கைமீறிப் போய்விட்டதாகவே தோன்றுகிறது. சீனா, தென்கொரியா நாடுகளைப் போன்று ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கும் இணையதளப் பயன்பாட்டுக்குமான வரைமுறைச் சட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...