அதிரை விவசாயிகளே... இந்த வாய்ப்பை தவற விடாதீங்க!

Editorial
0
விவசாயிகள் பயன்பெறுவதற்காக 3 முத்தான மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் படி,

1. சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியம்:

அறுவடை செய்த விளைப்பொருட்களை புதிய தொழில்நுட்பத்துடன் உலர்த்தி சந்தைபடுத்துவதற்காக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய கூடார உலர்த்தி (Solar
drier) 60 சதவீத மானியத்தில் அமைத்து தரப்படுகிறது.

விவசாயிகள் சூரிய கூடார உலர்த்தி மூலம் விளைப்பொருட்களை
உலர்த்தினால் விரைவில் உலர்ந்து விளை பொருட்களின் தரம் உயர்ந்து மதிப்பு கூடுகிறது. இக்கூடாரம் அமைப்பதால் காற்று, மழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

400 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரை சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் பட்சத்தில், சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் வரையிலும் இதர விவசாயிகளுக்கு ரூ.3.00 லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது.

2. சோலார் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைத்து கொடுக்கும் திட்டம்:

சூரிய சக்தி பம்பு செட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும்.

இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும் மற்றும் தமிழக அரசின் 40 சதவீத மானித்துடனும் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாகும்.

இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான AC மற்றும் DC மோட்டார் பம்பு செட்டுகளுக்கான (நீர்மூழ்கி பம்பு செட்டுகள் மற்றும் தரை மட்டத்தில் அமைக்கும் மோனோ பிளாக் பம்பு செட்டுகள்) விலை நிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHP AC மற்றும் 5 HP DC சூரிய சக்தியால் நீர்மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ. 2,37,947 மற்றும் ரூ.2,42,303 ஆகும். இதில் விவசாயிகள் 30% பங்களிப்பு முறையே ரூ.71,384 மற்றும் ரூ.72,691 ஆகும்.

HP AC பற்றும் 7.5HP DC சூரியசக்தியால் இயங்கும் நீர் முழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ.3,16,899 மற்றும் ரூ.3,49,569 ஆகும். இதில் விவசாயிகள் 30% பங்களிப்பு முறையே ரூ.95,070 மற்றும் ரூ.1,04,871 ஆகும்.

HP AC பற்றும் 10HP DC சூரியசக்தியால் இயங்கும் நீர்முழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்தற்கான மொத்த விலை முறையே ரூ.4,37,669 மற்றும் ரூ.4,39,629 ஆகும். இதில் விவசாயிகள் 30% பங்களிப்பு ரூ.1,31,301 மற்றும் ரூ.1,31,889 ஆகும். இந்த மொத்த விலை என்பது மோட்டார் அமைத்தல், வரிகள், 5 ஆண்டுகால பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியது ஆகும்.

3.சூரிய ஒளி மின் வேலி அமைக்க மானியம்:

தமிழகத்தின் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தி பாதிக்காத வண்ணமும் விளை பொருட்களின் மூலம் கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் ஒளி மின்வேலி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்வேலி அமைப்பானது ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. மின் வேலியைக் கடந்து செல்ல முயலும் விலங்குகள், அந்நியர்கள் மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் அதிர்ச்சியால் வேலியை கடந்து சென்று விளை பயிர்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களை நாசம் செய்திட இயலாது.

விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின் வேலியினை 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசையில் அமைத்து கொள்ளலாம். சூரிய ஒளி மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக 5 வரிசைக்கு ரூ.250, 7 வரிசைக்கு ரூ.350, 10 வரிசைக்கு ரூ.450 செலவாகும்.

தனிநபர் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் அல்லது 1,245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் அமைப்பதற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.18 இலட்சம் மானியம் வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் அதிரையை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் எழிலன் அவர்களை 9443678621 என்ற எண்ணில் அழைக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட செயற்பொறியாளர் கான் அவர்களை 94433 98633 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...