அதிரை வரலாற்றில் இன்று வித்தியாசமான 27-ம் கிழமை

Editorial
0

அதிரையில் எப்போதும் நோன்பின் 27-வது இரவு அன்று பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இரவுக்கு ஒளி சேர்க்க குழந்தைகள் எல்லாம்  புத்தாடைகளுடன் தெருக்களில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். பெரியவர்களோ பள்ளிவாசல்களில் லைலத்துல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவின் நன்மையை எதிர்பார்த்து இரவு முழுவம் தொழுகையிலும் வணக்க வழிபாடுகளிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

குறிப்பாக தக்வா, பெரிய ஜும்மா போன்ற பள்ளிகளில் தமாம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரியாணி நார்சா பட்டைகளுடன் அனைவரும் வீடு திரும்புவார்கள்.  முழுவதும் அன்றைக்கு சஹர் உணவு பிரியாணியாகவே இருக்கும். ஊர் முழுவதும் பிரியாணி வாடை வீசும். வீடுகளில் நடைபெறும் தராவீஹ் தொழுகைகளுக்கும் பெண்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் இருக்கும்.

ரமலான் மாதம் முழுவதும் ஈத் பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் 27-ம் நாளன்று பெருநாளுக்கான எதிர்பார்ப்பு உச்ச நிலையை அடைந்து பெருநாள் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாகவே 27ம் கிழமை மாறிவிடும். கடைத்தெருவில் ஜொலிக்கும் வண்ண விளக்குகளுடன் தொப்பிக்கடைகள் தோன்றி இருக்கும். கபாப் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஜவுளிக்கடைகளில் பெருநாள் புத்தாடை வாங்க ஜனங்கள் ஒன்றுகூடுவார்கள்.

ஆனால் இந்த வருடமோ பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு உள்ளன.  துணிக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கொரோனா அச்சம் காரணமாக திறந்திருக்கும் ஒன்றிரண்டு கடைகளிலும் பெரிய கூட்டம் இல்லை. 

தமாம் விட்டு லட்சக்கணக்கில்  செலவழிப்பதிலும், 27-வது நோன்பு மட்டுமே லைலத்துல் கத்ர் இரவு என்பது போல மக்கள் புத்தாடை அணிந்து கொண்டாடுவதிலும் நமக்கு உடன்பாடு இல்லை.  இருந்த போதும் காலம் காலமாக கவனித்த ஒரு விசயம் இல்லாமல் வெறுமை நிரம்பிய பள்ளிவாசல்களை பார்க்கும்போது மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ஏக்கம் ஏற்படுவதை உணர முடிகிறது. இனிவரும் காலங்களிலும் இந்த தமாமுக்கான பொருளாதாரத்தை வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்படுத்த முயல்வோம்.

Photos Courtesy: Adirai news - 2014

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...