அதிரை இமாம் ஷாபி போராட்டத்தையே மதிக்காத எம்எல்ஏவுக்கு நன்றி போஸ்டரா? மக்கள் கொதிப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி சீல் மற்றும் பூட்டு நேற்று மக்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு திறக்கப்பட்டு இருக்கிறது. 11 நாட்களாக அதிரை மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு நன்றி தெரிவித்து திமுகவினர் பகிர்ந்து வரும் போஸ்டர் அதிரை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் 11 நாட்கள் மக்கள் போராட்டம் நடந்தும் என்ன ஏது என்று கூட பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை கண்டு கொள்ளவில்லை என்பதே.

பட்டுக்கோட்டை தொகுதியில் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்த சமயத்தில் அதிராம்பட்டினம் மக்கள் மட்டும் பெருந்திரளாக திமுகவுக்கு வாக்களித்து அண்ணாதுரையை வெற்றியடைய செய்தனர். பல ஆண்டுகளாக சட்டசபைக்கு செல்ல முடியாமல் இருந்த தன்னை மீண்டும் சட்டசபைக்கு செல்ல உதவிய அதிராம்பட்டினம் மக்களுக்கு அண்ணாதுரை செய்யும் கைமாறு இதுதானா என வெதும்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள் அதிராம்பட்டினத்தை நோக்கி படையெடுத்து வந்த சூழலில் சொந்த தொகுதி எம்எல்ஏவே இதுவரை இப்பகுதியை ஏறெடுத்து பார்க்காமல் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பது திமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைவதற்கு சிறுபான்மை மக்களின் பெருவாரியான வாக்குகளே முக்கிய காரணமாக இருக்கிறது.

குறிப்பாக பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் ஏற்கனவே சொன்னதைப் போல் அதிராம்பட்டினத்தின் வாக்குகளால்தான் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிராம்பட்டினம் மக்களின் பெருவாரியான ஆதரவின் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கமும் வெற்றி பெற்றார். ஆனால் இவ்விருவருமே இதுவரை அதிராம்பட்டினத்திற்காக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது மக்களை வேதனை அடைய செய்திருக்கிறது.

2024 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுகவின் வாக்கு வங்கிகைக்கு வேட்டு வைக்கும் வேளையில் இவர்கள் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் திமுக அனுதாபிகளையும் சூழ்ந்துள்ளது. திமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் வைத்த சீல்மற்றும் போராட்ட சமயத்தில் அண்ணாதுரை வராதது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த விளம்பர போஸ்டர் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...