அதிரையில் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு மீறல்.. பழைய சாலை மீதே போடப்படும் மெயின் ரோடு!

Editorial
0
அதிரை வண்டிப்பேட்டை ஆலடிக்குளம் அருகில் இருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த சாலை தரமாக அமைக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறி?
ஆம், பழைய குண்டும் குழியுமான சாலையை மில்லிங் என்று சொல்லப்படும் உடைத்து எடுக்காமல் லேசாக சுரண்டிவிட்டு அதன் மீதே புதிய சாலையை போடுகிறார்கள். இதனால் சாலையின் உயரம் அதிகரித்து வீடுகள், கடைகள் தாழ்வாகிவிடுகின்றன. இதனால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அடுத்த மழைக்கே சாலை பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசே சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது ஆட்சிக்கு கீழ் நடைபெறும் சாலை திட்டங்களில் அவரது உத்தரவுக்கே மதிப்பளிக்காமல் இதுபோன்று தரமற்ற சாலைகளை அமைக்கிறார்கள். அதேபோல்,  2020 ஆம் ஆண்டு மயிலாடுதுறை சாலை தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "பழைய சாலையை தோண்டி எடுக்காமல், அதற்கு மேல் புதிய சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்களை, கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
 இல்லாவிட்டால், இந்த பிரச்சினை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும். சாலை பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, பழைய சாலையை தோண்டாமல் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களை பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும்." என்று உத்தரவிட்டது.
பல்வேறு போராட்டங்களிக்கு பிறகு அமைக்கப்படும் இந்த சாலை அடுத்த மழைக்கே குண்டும் குழியுமாக மாறாமல் இருக்க இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சாலையை தோண்டி எடுத்த பிறகே புதிய சாலையை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...