அதிரை கேஸ் டெலிவரி தொழிலாளியை மட்டும் பணிநீக்கம் செய்தால் போதுமா? தூண்டிவிட்ட அதிகாரி யார்?

Editorial
0
கொரோனாவை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி மதவெறியர்கள் பரப்பிய வதந்தியால் பல மருத்துவமனைகளில் இஸ்லாமியர்களுக்கு பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் மறுக்கப்படுகின்றன. நேற்று அதிரையை சேர்ந்த சகோதரியின் பிரசவத்துக்கு இரத்தம் தர தஞ்சையை சேர்ந்த இரத்த வங்கி மறுத்து உள்ளது. இந்த அதிர்ச்சி குறைவதற்குள், அதிரை முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம் ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 

"நான் கொள்ளுக்காடு இண்டேன் கேஸுக்கு விண்ணப்பித்து 4, 5 நாட்களாகியும் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து நான் புகாரளித்துள்ள நிலையில், நேற்று இண்டேன் ஊழியர் என்னை அழைத்து கேஸ் முன்பதிவை ரத்து செய்துவிட்டீர்களா என வினவினார். நான் அதை மறுத்தபோது நீங்கள் கேன்சல் செய்துவிட்டதாக ட்ரைவர் எழுதி கொடுத்துள்ளார் என அவர் கூறினார். உடனே நான் ட்ரைவர் நம்பரை கேட்டேன். போனில் பேசிய அந்த ஊழியர் முத்தம்மாள் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற ட்ரைவர் எண்ணை கொடுத்தார். நான் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, நோயை ஒட்டிக்கொண்டு வந்து விடதே, எட்டி நின்று கேஸை கொடு என கம்பெனியில் சொல்கிறார்கள் என அவர் கூறுகிறார். இந்த சூழ்நிலையை பலரும் பயன்படுத்தி நம்மை கேவலப்படுத்துகிறார்கள். பாஸ்கரிடம் இதுபோன்ற அனுபவத்தை யாரேனும் சந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்" என்றார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியரை இண்டேன் கேஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. 

ஆனால், இந்த நடவடிக்கை அந்த தொழிலாளி மீது மட்டும் தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனுல் அஸ்லம் வெளியிட்ட ஆடியோவில், "நோயை ஒட்டிக்கொண்டு வந்து விடதே, எட்டி நின்று கேஸை கொடு என கம்பெனியில் சொன்னார்கள்" என பாஸ்கர் தன்னிடம் சொன்னதாக கூறினார். அப்படியென்றால் பாஸ்கர் இவ்வாறு ஊருக்குள் வந்து கேஸ் விநியோகம் செய்ய தயங்கியதற்கு முதல் காரணமாக இருந்தது நிறுவனத்தில் அவ்வாறு கூறியவர் தான். அவர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சரியாக இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கீழ் மட்டத்தில் உள்ள தொழிலாளியை சிக்க வைத்துவிட்டு தப்பிவிடுவது மேலதிகாரிகளின் இயல்பு. பாஸ்கர் பணி நீக்கம் விசயத்திலும் இது நடந்துள்ளதாக தெரிகிறது. ஒரு சாதாரண கூலித் தொழிலாளியான பாஸ்கர் தனது வேலை காக்கவும், மேலதிகாரி ஏற்படுத்திய அச்சத்தின் விளைவாகவும் இப்படி நடந்து இருக்கலாம். அதற்காக அவரது வேலை பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அவருக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காது. அன்றாட செலவுக்கே இப்போது அந்த குடும்பம் கஷ்டப்படும். 

அஸ்லம் சட்டநடவடிக்கை எடுத்தால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் அவரை திருப்திபடுத்துவதற்காக பாஸ்கரை மட்டும் பணி நீக்கம் செய்துவிட்டு மேலிருப்பவர்கள் தப்பித்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் பலரும் தற்போது குணமடைந்து வருகின்றனர். இதில் பெரிதும் குற்றம்சாட்டப்பட்ட தப்லீக் ஜமாத்தினரின் இரத்தத்தை சேகரித்து பிளாஸ்மாவை எடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், உள்ளூரில் உள்ளவர்களோ சில சமூக  விரோதிகளின் அவதூறான வெறுப்புக் பேச்சைக்கேட்டு பல ஆண்டுகளாக சகோதரர்களாக பழகி வந்தவர்களை ஒதுக்கும் வேலையை செய்கிறார்கள். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...