Adirai Pirai - அதிரை ATMல் பணத்தை இழந்த பெண்ணின் பெரிய மனசு.. ₹20,000 எடுத்துச்சென்றவர் மீதும் கருணை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டது இந்தியன் வங்கி. சேர்மன்வாடி அருகே அமைந்துள்ள இந்த வங்கியை ஒட்டி ஏடிஎம் மையமும் உள்ளது. இந்த மையத்தில் ஏடிஎம் இயந்திரம் மற்றும் பணம் டெபாசிட் செய்யும் சிடிஎம் இயந்திரம் என இரண்டு இயந்திரங்கள் உள்ளன.

இதில் ஒரு இயந்திரம் அடிக்கடி பழுதாகி வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அதிரையை சேர்ந்த பெண்மணி ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். இவர் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் ரூ.20,000 எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் பணம் வராததால் அருகில் இருந்த பணம் எடுக்கும் இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்திருக்கிறார்.

முன்பு 20 ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்த இயந்திரத்தில் பணம் வருகிறதா என்பதை பார்ப்பதற்காக ஏடிஎம் மையத்திலேயே பத்து நிமிடங்களுக்கு மேல் அவர் காத்திருந்துள்ளார்.  அப்போது அடுத்தடுத்து இரண்டு நபர்கள் அந்த இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் இயந்திர கோளாறு காரணமாக அவர்களுக்கும் பணம் வரவில்லை.

15 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பிறகு ஏடிஎம் மையத்தை விட்டு அந்த பெண்மணி புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் எடுக்க முயற்சித்த 20 ஆயிரம் ரூபாய் பணம் வெளியே வந்துள்ளது. அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த மஞ்சள் சட்டை அணிந்த மர்ம நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ஏடிஎம் இயந்திரத்தின் கோளாறு காரணமாகவே அந்த பெண்மணி பணத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக வங்கி கிளையில் புகார் அளித்த பின்னர் அவர்கள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். ஏடிஎம் சிசிடிவி கேமராவில் பணம் திருடப்பட்டு இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

அந்தக் காட்சியில், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கொட்டியதை பார்த்த மஞ்சள் சட்டை அணிந்த இளைஞர் அவசர அவசரமாக பணத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டு செல்வது தெரிகிறது. பணத்தை எடுத்து தப்பி சென்ற மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சியும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக அதிரை பிறையில் நேற்று இரவு வெளியிட்ட செய்தி மற்றும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. இது சம்பந்தப்பட்ட இளைஞரின் பார்வைக்கும் சென்றுள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞர் காவல் நிலையத்துக்கு வருகை தந்து பணத்தை வங்கி மேலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்பொழுது பணத்தை எடுத்த இளைஞர் திருட வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எடுக்கவில்லை என்றும், இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீக்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் தொடர்புகொண்டு பேசிய அந்த பெண், பெருந்தன்மையோடு இளைஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் புகைப்படத்தை நீக்குமாறு கேட்டுகொண்டார். தனது 20,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு 10 நாட்கள் தராமல் வைத்திருந்தவர் என்று கூட நினைக்காமல், மனிதாபிமானத்துடன் அந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லாமல் மன்னித்து விட்டுள்ளார். 




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...