அதிரை பள்ளி இடம் கொடுத்தால் மட்டும் போதாது.. குணசேகரனை நீக்கனும் - ஸ்டாலினுக்கு வெல்பேர் கட்சி மாநில துணை தலைவர் கவுஸ் கடிதம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
இது குறித்து அவர் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட புல எண் 313/2 ல் உள்ள தமிழ்நாடு அரசு வருவாய் துறைக்கு சொந்தமான 52 சென்ட் நிலமானது கேட்பாரற்று கிடந்த நிலையில் சமூக விரோதிகள் துஷ்பிரயோகம் செய்து வந்த நிலையில் அதிராம்பட்டினம் நகர மக்கள் நன்மை கருதி அங்குள்ள ஜமாத்தார்கள் வேண்டுகோளுக்கிணங்க 1975 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்திடம் இமாம் ஷாபி பள்ளி ஆரம்பிக்கும் வகையில் குத்தகைக்கு விடப்பட்டது. 

மேற்படி குத்தகை நிலம் தவணை முடியும் தோறும் அன்றைய அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தால் முறைப்படி குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. 2009 ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவுறும் நிலையில் மேற்படி இடத்தை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. மேற்படி விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்க விருந்த நிலையில் முஸ்லிம் சமூக விரோத மனநிலையில் உள்ள அன்றைக்கு பேரூராட்சி தலைவராகவும் திமுக அதிராம்பட்டினம் நகர தலைவராகவும் இருந்த ராம. குணசேகரன் என்பவர் மேற்படி நிலத்தை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்திற்கு பட்டா மாறுதல் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் 10.10.2008 ஆம் தேதியில் மனு கொடுத்தார். மேலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிப் பேராணை வழக்கும் தொடுத்தார்.( வழக்கு எண்: 13848/2009). மேற்படி வழக்கில் 22.12.2009ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ராம குணசேகரன் மேற்படி நிலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவிற்கு மனுதாரரிடம் விசாரணை செய்து மனுவை முடிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டல் வழங்கியது. அதன் அடிப்படையில் 11.02.2010 அன்று உரிய விசாரணை மேற்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ராம குணசேகரன் உள்நோக்கத்தோடு மனுவை அளித்திருப்பதாக கண்டறிந்து அவருடைய மனுவை தள்ளுபடி செய்ததோடு மேற்படி நிலத்தை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்திற்கு பட்டா மாறுதல் செய்ய உத்தரவிட்டார்.
(மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளது)

அதன் பிறகு எவ்வித இடையூறும் இன்றி செயல்பட்டு வந்த இமாம் ஷாபி பள்ளி மேற்படி நிலத்தில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை ஏற்படுத்தி நடத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியரால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு மீண்டும் 2021 ஆம் ஆண்டு திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்ட நகராட்சி துணைத்தலைவர் பதவியை சதி வேலைகளின் மூலம் கைப்பற்றிய ராம குணசேகரன், வஞ்சக எண்ணத்தோடு இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்திடம் வாடகை பெற்றுக் கொள்ளக் கூடாது என தடை ஏற்படுத்தி, இமாம் ஷாபி பள்ளி மேற்படி இடத்திற்கு வாடகை தரவில்லை என்று தவறான தகவலை நீதிமன்றத்திற்கு அளித்து இடத்தை காலி செய்து தர வேண்டும் என மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

வாடகை வழக்காக விசாரிக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற கிளை உரிய அறிவிப்பாணைகளுடன் இடத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தற்பொழுது வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் எவ்வித அறிவிப்பானைகளும் இன்றி முறைமைகளும் பின்பற்றப்படாமல் அதிகாலை நேரத்தில் மேற்படி பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளாகத்தை சீல் வைத்ததுடன் ஜேசிபி வாகனத்தைக் கொண்டு இடித்து தள்ளவும் முற்பட்டார்.

காலம் காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்கள் வாக்குகளை அளித்து வரும் அதிராம்பட்டினம் நகர முஸ்லிம் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதியாகும் இது. 2010 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியாளரால் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை மற்றும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட மேற்படி நிலத்தை முறைப்படி பட்டா மாறுதல் செய்து அளிப்பதே உரிய நீதியாகும்.

சதி வேலைகள் செய்து நகராட்சி துணைத் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ள ராம. குணசேகரனை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். பாசிச மனப்பான்மையோடு செயல்படும் ராம.குணசேகரனை அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் காலம் காலமாக திமுகவின் வாக்கு வங்கியாக இருந்து வரும் அதிராம்பட்டினம் நகர முஸ்லிம் வாக்குகள் இனிவரும் காலங்களில் திசை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதையும் கவனப்படுத்துகிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டின மக்கள் தொடர்ந்து 9வது நாட்களாக தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட பிரச்சினை தீவிரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இமாம் ஷாபி பள்ளிக்கூடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விடுவதுடன் ராம குணசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ...

இப்படிக்கு ...
உண்மையான திராவிட மாடல் ஆட்சியை விரும்பும். ம. முகமது கவுஸ். " என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...