அதிரை மெயின் ரோட்டில் உள்ள ARDAவுக்கு சொந்தமான நிலத்தில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு அதிரை ஊரக மேம்பாட்டு சங்கம் (ARDA) சார்பில் அதிரை ஷிபா மருத்துவமனைக்கு என மெயின் ரோடு அருகே அரசு இரண்டாம் எண் பள்ளிக்கு பின்புறம் 1.34 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை அரசியல் பின்புலம் கொண்ட தனிநபர்கள் அப்போதைய பேரூராட்சி துணையோடு ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அரசு அர்டாவுக்கு நிலம் விற்பனை செய்ததை எதிர்த்து வீரகனேசன் என்பவர் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவ்வழக்கினை பட்டுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேற்படி வீரகனேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன் பிறகு சங்கத்தின் சார்பில் அவ்விடத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சியில் விண்ணப்பித்து, அனுமதி பெற்ற நிலையில் இதற்கு ஒரு தரப்பினர் இடையூறு செய்ததாக கூறி, ARDA சங்கத்தின் சார்பில்  நிரந்தர உறுத்துக் கட்டளை பிறப்பிக்க கோரி அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரித்த பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மேற்படி "சொத்தில் வாதி சங்கத்திற்கு உள்ள வசத்திலும் அனுபவத்திலும் எதிர்வாதிகளோ அல்லது அவர்களுடைய நபர்களோ தலையிடக்கூடாது” என்று  தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து எதிர்தரப்பு பட்டுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உரிமையியல் மேல்முறையீட்டு மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் தீர்ப்பினை உறுதி செய்தன.

தொடர் வழக்குகளால் இந்த நிலத்தில் மருத்துவமனை கட்டும் பணியினை துவங்குவதில் தவிர்க்க முடியாத காலத்தாமதம் ஏற்பட்டது. அதே நேரம் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க பொருட்டு கருங்கல் நட்டு, கம்பி வேலி அமைத்து இருந்தோம். இடையில் சிலர்  கம்பி வேலிகளை அகற்றவே, 2018 ஆம் ஆண்டு அரசு சர்வேக்கு விண்ணப்பித்து சங்கத்திற்கு சொந்தமான மேற்படி நிலத்தினை அளந்து கருங்கல் வேலி அமைத்தனர்.

கடந்த 16.05.2023 அன்று முதல் சுற்றுச்சுவர் கட்டும் வேலை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 22.05.2023 காலை சுமார் 10.40 மணியளவில் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் கூறியதன் பேரில் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம் உள்ளிட்டோர் சுற்றுச்சுவர் கட்டும் வேலையில் தடுத்ததாக ARDA புகாரளித்தது.

இந்த நிலத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு அர்டா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி நாகார்ஜுன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி ஆணையர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீதிமன்றம் உத்தரவிட்டும் அர்டா நிலத்தில் நகராட்சி தலையிடுவதற்கு என்ன உரிமை உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்டு 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.