அதிரையில் அரசியலாலும் அலட்சியத்தாலும் சிக்கித் தவிக்கும் மக்கள்

Editorial
0
அதிராம்பட்டினத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அனுமதி அட்டையின்படி பச்சை நிற அட்டையை திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும், ஊதா நிற அட்டையை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் மற்றும் ரோஸ் நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை இருந்தால் தான் அவசியத்தேவைக்காக வாரம் 2 நாள் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வெளியில் செல்ல முடியும். இந்த அட்டையை விநியோகிக்கும் பொறுப்பை அதிரையை சேர்ந்த சில தன்னார்வலர்களிடம் பேரூராட்சி தொடக்கத்தில் வழங்கியதாகவும், அவர்கள் இந்த பணியை வேகமாக செய்து வந்த நிலையில், அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் எதற்காக வண்ண அட்டை வழங்கினீர்கள் என ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பேரூராட்சியிடம் கேட்டு தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அட்டை விநியோகிக்கும் பணியை சில இடங்களில் முஹல்லாக்களும், சில இடங்களில் பேரூராட்சியும் செய்துள்ளது. ஆனால், இந்த அட்டைகள் சரிவர அனைத்து வீடுகளுக்கும் சென்று சேரவில்லை என்ற தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தோம். அதிரை நடுத்தெரு கீழ்புறம், ஆலடித்தெரு ஆகிய பகுதி மக்கள் நம்மை அழைத்து இதுகுறித்து தெரிவித்த போது, 
அரசிடம் அட்டைகளை பெற்று வீடுகளுக்கு விநியோகிப்பதாக கூறிய பொறுப்பாளர்கள் அலட்சியம் காரணமாக அட்டை கிடைக்காமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது என்றனர். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு நாம் வெளியிட்ட செய்தியை படித்த மக்கள் மேலத்தெரு மேல்புரம், கிராணி நகரில் உள்ள வீடுகளிலும் இந்த அட்டை இன்னும்  வரவில்லை என்ற கருத்திட்டனர். 

இந்நிலையில், அப்பதிவை வெளியிட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில் வண்ண அட்டை வந்துவிட்டதா என மீண்டும் நாம் அவர்களை தொடர்பு கொண்டு வினவினோம். அப்போது கூறிய அவர்கள், அட்டை வழங்கும் பொறுப்பாளர் உங்கள் செய்தியை பார்த்தவுடன் சில வீடுகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு மீதம் உள்ள அட்டைகளை தேவையானவர்களுக்கு வழங்காமல் பேரூராட்சியிடமே ஒப்படைத்துவிட்டார் என வேதனையுடன் தெரிவித்தனர். ஒரு காரியத்தை முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் எதற்காக பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. செய்ய முடியாத காரியத்தை மூக்கை நுழைப்பதை விட அமைதியாக இருந்துவிடலாம். 

பேரிடர் காலங்களில் சிலர் செய்யும் கேவலமான அரசியல் காரணமாகவும், இதுபோன்ற பொறுப்பற்றவர்களின் அலட்சியம் காரணமாக மக்கள் பலர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிரை பேரூராட்சி நிர்வாகம் இந்த விசயத்தில் தலையிட்டு அட்டை இல்லாத வீடுகளுக்கு உடனே அட்டைகளை வழங்கிடுமாறு அதிரை பிறை வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். இதுபோல் உங்கள் தெருக்களில் இந்த அட்டை விநியோகிக்கப்படவில்லை என்றால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கருத்திடுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...