அதிரையில் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகரித்த இறப்பு விகிதம்!

Editorial
0
அதிரை பிறை தொடங்கி ஏழு ஆண்டுகளில் பல மரண அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அதிகபட்சமாக வாரத்துக்கு 2 அல்லது மூன்று பேர் வரை மரணிப்பார்கள். சில சீசன் நேரங்களில் தினசரி ஒரு மரணம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு மரணம் என்ற வீதம் இருக்கும் ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அதிரையில் தினசரி இரண்டு மரணங்கள் நிகழ்வது காணமுடிகிறது.

இது மேலும் அதிகரித்து கடந்த வெள்ளிக்கிழமை 9 பேர் உயிரிழந்தது ஊரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது அடுத்த நாள் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். தொடர்ந்து தினசரி 2-க்கும் மேற்பட்டோர் இறப்பெய்தி வருகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தசூழலில் இதை அசாதாரணமான நிலையாகவே பார்க்கவேண்டி இருக்கிறது.

இதில் பெரியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் வழக்கத்துக்கு மாறாக உயிரிழந்து வருகின்றனர். பலருக்கு வேறு சில உடல்நல குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அனைவரும் ஒரே நேரத்தில் இறப்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. கொரோனா என்ற இந்த நோய் தொற்று, மற்ற உடல் நலகுறைபாடு உடையவர்களை, முதியவர்களை அதிகம் பாதிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதுகலை மருத்துவர் முஹம்மது ஆரிப்

அதிரையில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ள மரணங்கள் பற்றி நமதூரை சேர்ந்த இளம் மருத்துவர் ஆரிப் ஒரு ஒப்பீட்டு வரைபடத்தை தயாரித்து உள்ளார். அதை பார்த்தால் உண்மை நிலை என்னவென்று ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

2019 - சிவப்பு நிறம் 
2020 - நீல நிறம்

முதல் படம்: ஜனவரி 2019 - ஜூலை 2019 இடையே ஏற்பட்ட மரணங்களுக்கும் ஜனவரி 2020 - ஜூலை 2020 இடையே ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையிலான ஒப்பீடு.

2-வது படம்: அதே கால அளவில் உயிரிழந்த 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒப்பீடு.

3-வது படம்: அதே கால அளவில் உயிரிழந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒப்பீடு.

4-வது படம்: ஆண்களின் மரணம் பற்றிய ஒப்பீடு
5-வது படம்: பெண்களின் மரணம் ஒப்பீடு.
பின்குறிப்பு: இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிரை செய்தி ஊடகங்களில் வெளியான மரண அறிவித்தல்களை வைத்து தொகுக்கப்பட்டது. எனவே இதில் உள்ள எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.

இந்த படஙகள் நமதூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளதை காட்டுகின்றன. குறிப்பாக ஜூலை மாதத்தில். இவர்கள் அனைவரும் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்பது நமது வாதம் அல்ல. அதே நேரம் ஏன் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதை சிந்திக்காவிட்டால் கைசேதப்படபோவது நாம் தான்.

ஊரில் காய்ச்சல் வந்த பலர் மருத்துவரிடம் சென்றால் கொரோனா சோதனை செய்ய சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கண்டுகொள்ளாமல் அடிப்படை சிகிச்சைக்கூட எடுப்பதில்லை என்ற தகவல் வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஆரிப் கூறுகையில், காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, நுகர்வாற்றல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு, சுவைத்திறன் பாதிப்பு, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக உள்ளன. 

இந்த அறிகுறி இருந்தால் ராஜாமடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொரோனா சோதனை செய்யலாம். கொரோனா சோதனையை கண்டு யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தொடக்க நிலையிலேயே நோய் தொற்று கண்டறியப்பட்டால் குணமடைய செய்வது சுலபம். 

ஒரு வேளை சோதனைக்கு அஞ்சினால், 7 நாட்கள் வெளியில் செல்லாமல் குடும்பத்தாரிடம் இருந்தும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தவிர்க்க முடியும். மேலும் தேவையற்ற பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள், வீணாக வீதியில் கூடி பேசுவது, மைதானங்களில் விளையாடுவது போன்றவற்றை நிச்சயம் கைவிட வேண்டும். சமூக  இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து அவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்ல வேண்டும். நமக்கு வயது குறைவு தானே என்று வெளியில் பொறுப்பின்றி சுற்றுவது, மைதானங்களில் விளைவாடுவது போன்றவற்றால் நமக்கு கொரோனா பரவினால், நம் மூலமாக வீட்டில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய் வாய்ப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என்றார்.

இந்த பதிவு மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. இதுபற்றி எந்த விழிப்புணர்வும் இன்றி மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே வெளியிடப்படுகிறது. 

வாட்ஸ் அப் வதந்திகளை படித்துவிட்டு பேசுபவர்களின் பேச்சுக்களை கேட்பதை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு மருத்துவம் படித்து வந்த நமதூர் மருத்துவர்கள் சொல்வதை கேட்போம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...